MENU

Show more

பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்- தினமலர் செய்தி

அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, 'செக்' டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்

நன்றி: தினமலர்


தமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

பா.ஜ., மேலிடத்தின் இத்திட்டத்தை, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மூலமாக அறிந்த, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிர்ச்சியில் ஆடிப் போயுள்ளனர்.திராவிட கட்சிகளில், கடவுள் மறுப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு கொள்கையை கடைபிடிப்பதில், தி.மு.க., முதன்மை வகித்தது. அந்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க.,வில், கடவுள் மறுப்பு கொள்கை கைவிடப்பட்டது.

பா.ஜ., ஆதரவு நிலை

கர்நாடகாவில் உள்ள, தாய் மூகாம்பிகை கோவிலுக்கு, எம்.ஜி.ஆர்., அடிக்கடி சென்று வழிபட்டார். இந்துத்துவா எதிர்ப்பிலும் தீவிரம் காட்டாமல், கட்சியை வழிநடத்தினார். அவரது பாணியிலேயே, அ.தி.மு.க.,வை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் வழிநடத்தினார்.இன்று, மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும், பா.ஜ.,வை, துவக்கத்தில், மஹாராஷ்டிராவில், பால் தாக்கரே தலைமையில் இயங்கிய, சிவசேனா மட்டுமே ஆதரித்தது.

தமிழகத்தில், 1991ல் நடந்த, சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவை நடந்த போது, தமிழகத்தில் இருந்து ஆட்களை அனுப்பி ஆதரவு தெரிவித்தார்.தொடர்ந்து, 1998ல் நடந்த, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில், பா.ஜ., - ம.தி.மு.க., - பா.ம.க., - வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான, ராஜிவ் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து, கூட்டணி அமைத்து போட்டியிட்டு, வெற்றி பெற்றன.

அதனால், மத்தியில், வாஜ்பாய் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்தத் தேர்தல் வாயிலாக, தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு, ஓர் அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு, அ.தி.மு.க., கூட்டணியே காரணம் என்பதால், பா.ஜ., தலைவர்கள் மத்தியில், ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்தது.தொடர்ந்து, 2004ல் நடந்த, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்பின் நடந்த, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைக்கவில்லை.

இருப்பினும், பிரதமர் மோடி, முன்னாள் துணை பிரதமர், அத்வானி, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர்கள், சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் உட்பட, பா.ஜ., மூத்த தலைவர்கள் பலருடன், ஜெயலலிதாவின் நட்பு நீடித்தது. அத்துடன், தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த காலம் முதல், அவருடன், ஜெ., நட்பு பாராட்டினார்.கடந்த டிசம்பரில், ஜெ., மறைந்தார். அதன்பின், பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமையிலான அரசுக்கும், மத்திய அரசு முழு ஆதரவு அளித்தது.

'வர்தா' புயல் மற்றும் வெள்ள சேதங்களுக்கு, தமிழகத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்கியது. ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி, தமிழகத்தில் போராட்டம் நடந்த போது, அதற்கான புதிய வழிமுறைகளை காட்டி, தமிழகத்தில் நிரந்தரமாக, அந்த வீர விளையாட்டு நடைபெற உதவியது.

இப்போது இல்லை


ஆனால், பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், அவரை, முதல்வர் பதவியிலிருந்து
நீக்கி விட்டு, சசிகலா முதல்வராக முயற்சித்ததை, மத்திய அரசு விரும்பவில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல், அ.தி.மு.க., அரசும், கட்சியும் செயல்பட வேண்டும் என, பிரதமர் மோடியும், பா.ஜ., மேலிடமும் விரும்பின.அதற்கு தகுந்தாற்போல, சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனாலும், தன் அக்கா மகனான, தினகரனை, கட்சியின் துணை பொதுச் செயலராக்கினார். அதே நேரத்தில், சசிகலா தயவில் முதல்வரான, பழனிசாமி, தற்போது, அவருக்கும், தினகரனுக்கும் எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளார்.கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை, தற்காலிக பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கியதோடு, தினகரனுக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அறிவித்தார். அ.தி.மு.க.,வில், இனி பொதுச் செயலர் பதவியே இல்லாத வகையில், கட்சியின் விதிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, மத்தியஅரசு பல வகையிலும் ஆதரவு அளித்தாலும், தமிழகத்தில், பா.ஜ., வலுவாக காலுான்ற வேண்டும் என்பதே, அந்த கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம்.

அதாவது, அ.தி.மு.க.,வின் மொத்த ஓட்டு சதவீதத்தில், சரிபாதி, தி.மு.க.,வுக்கு எதிரானவை மற்றும் இந்துத்துவாவுக்கு ஆதரவானவை. அந்த ஓட்டுகளை எல்லாம், பா.ஜ., பக்கம் திருப்பி விட வேண்டும்; தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி அரசை உருவாக்க வேண்டும் என்பதே, அந்த தலைவர்களின் எண்ணம்.அதற்கேற்ற வகையில், அ.தி.மு.க.,வில் உள்ள குழப்பத்தை சாதகமாக்கி, காய் நகர்த்தி வருவதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெருக்கடி


இது தொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்த பன்னீர் அணியை, ஓரங்கட்ட வேண்டும் என, முதல்வர் பழனிசாமி, துவக்கத்தில் நினைத்தார்.ஆனால், பன்னீர்செல்வம் மீது, பிரதமர் மோடிக்கு, நல்ல அபிமானம் இருந்ததால், அவரை, கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என, தனக்கு நெருக்கமானவர் கள் மூலம், முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தார். சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்ட வேண்டும் என்றும், சூசகமாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் எண்ணத்தை புரிந்த, முதல்வர் பழனிசாமி, பன்னீர் அணியை தங்கள் அணியுடன் இணைத்ததோடு, அவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கினார். தற்போது, இரு அணியினரும் ஒன்றாக சேர்ந்து, தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதற்கேற்ற வகையில், பிரமாண பத்திரங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யும் பணிகளை, அமைச்சர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், சமீபத்தில், டில்லியில் உள்ள, பா.ஜ., மேலிட தலைவர்களை, தமிழக அமைச்சர்கள் குழு சந்தித்து பேசி உள்ளது. அப்போது, 'முதல்வர் பழனிசாமி ஆட்சியை நீடிக்கச் செய்ய வேண்டும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு, கவர்னர் உத்தரவிடக் கூடாது' என்பது உட்பட, சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

ஆபத்து ஏற்படும்



அதற்கு பதிலளித்த, பா.ஜ., மேலிட தலைவர்கள், 'இன்னும் ஆறு மாதங்களுக்கு, பழனிசாமி அரசுக்கு ஆபத்து ஏற்படாது. அதே சமயம், முதல்வர் பழனிசாமி அணியிலிருந்து, மேலும் சில, எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறும் சூழ்நிலை உருவானால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்.அப்போது தான், சட்டசபையை, ஆறு மாத காலத்திற்கு முடக்கி வைக்க வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, அரசுக்கு ஆதரவு அளிக்கும், எந்த, எம்.எல்.ஏ.,க்களும், இனி வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே, உங்களுக்கு நல்லது' என, கூறியுள்ளனர்.

அத்துடன், '2019ல் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளது. அப்போது, பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கட்டாயம் கூட்டணி வைக்க வேண்டும். தேவையெனில்,தி.மு.க.,வுக்கு எதிரான, வேறு சில கட்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.'அப்படி கூட்டணி அமைக்கும் போது, முன்னர், காங்கிரசுடன் கூட்டணி அமைத்த போது, எம்.ஜி.ஆர்., பின்பற்றிய பார்முலாவையே, அ.தி.மு.க.,வும் பின்பற்ற வேண்டும்.

அதாவது, தேசிய கட்சியான, பா.ஜ.,வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, மொத்தமுள்ள, 40 லோக்சபா தொகுதிகளில், 30ஐ, பா.ஜ.,வுக்கு ஒதுக்க வேண்டும்; மீதமுள்ள, 10 தொகுதிகளில், அ.தி.மு.க.,
போட்டியிட வேண்டும்.'அதே போல, சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 174ல், அ.தி.மு.க.,வும், 60ல், பா.ஜ.,வும் போட்டியிட வேண்டும். இந்த பார்முலா அடிப்படையில், தேர்தலை சந்திக்க வேண்டும்' என்பதே, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் விருப்பம்.

அமித் ஷாவின், நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:



தற்போது, பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க, மத்திய அரசு பல வகையிலும், ஒத்துழைப்பு தருவதால், அதற்கு பிரதிபலனாக, அ.தி.மு.க., தலைவர்கள், இந்த பார்முலாவை ஏற்க வேண்டும். இது தொடர்பாக, விரைவில், உத்தரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையெனில், ஆட்சி நீடிக்க, நாங்கள் உத்தரவாதம் தர முடியாது.

நிபந்தனை

இந்த விஷயத்தில், அ.தி.மு.க., தலைவர்கள் ஏதாவது முரண்டு பிடித்தாலோ அல்லது குழப்பம் ஏற்படுத்த முற்பட்டாலோ, அடுத்த ஆண்டு மே மாதம், கர்நாடகாவில் நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலுடன் சேர்த்து, தமிழக தேர்தலையும் நடத்தும் நிலைமை உருவாகி விடும். ஆட்சியை காப்பாற்ற கைகொடுத்தும், நாங்களே, அதை கலைக்கவும் வழிவகுத்து விடாதீர்கள். ஆட்சி அரியாசனமா; இல்லை ஆட்சி கலைப்பா என்பதை, முதல்வர் பழனிசாமியும், மற்ற, அ.தி.மு.க., மூத்த தலைவர்களும் முடிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

பா.ஜ.,வின் நிபந்தனை, அ.தி.மு.க.,வினரை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இவ்வாறு டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் வேட்பாளர் ரஜினி?

நாட்டில், மொத்தமுள்ள, 29 மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தற்போது, 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன. காங்., மற்றும் பிற கட்சிகளின் ஆட்சி, 11 மாநிலங்களில் நடக்கின்றன. இதுதவிர, டில்லி யூனியன் பிரதேசத்தில், ஆம் ஆத்மியும், புதுச்சேரியில், காங்., ஆட்சியும் நடக்கின்றன. மேலும், லோக்சபா தேர்தலையும், மாநிலங்களின் சட்டசபை தேர்தலையும், ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும், சமீப நாட்களாக வலுத்து வருகிறது. தேர்தலை கமிஷனும், இதற்கு ஆதரவாக உள்ளது.

இந்த யோசனைக்கு, மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டதால், நாடு முழுவதும், ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறலாம்.இருப்பினும், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பரிந்துரைக்கு, அவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் பெற முடியுமா என்பது சந்தேகமே. அதனால், தமிழக சட்டசபை தேர்தலை மட்டும், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்த, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. தேர்தல் நடப்பதற்கு, சில மாதங்களுக்கு முன், நடிகர் ரஜினி, புதுக்கட்சி துவக்க திட்டமிட்டு உள்ளார்.

அப்படி அவர், புதுக்கட்சி துவக்கும்பட்சத்தில், அவரை, முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டு, தேர்தலை சந்திக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. அப்படிப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வினரும், ரஜினியை ஆதரிக்க வேண்டிய நிலைமை உருவாகும். இதற்கு கட்டியம் கூறும் வகையில், பிரதமர் மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்தின், மூன்றாவது ஆண்டை ஒட்டி, ரஜினி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'துாய்மையே கடவுள்... பிரதமர் மோடியின், துாய்மை இந்தியா திட்டத்திற்கு, என் முழு ஆதரவை வழங்குகிறேன்' என்றும் கூறியுள்ளார்.

சென்னையில், நடிகர் கமலை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில், சந்தித்துப் பேசினார். அவர்கள் இருவருக்கும், 'செக்' வைக்கும் வகையில், பிரதமர் மோடியை, ரஜினி பாராட்டியது, பா.ஜ.,வுக்கான, அவரது ஆதரவை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026