MENU

Show more

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..!


 நேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். 
ஒரு தனி மரபே இருக்கிறது. 

முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்க வேண்டும், 
பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து உளமாற வணங்க வேண்டும், 

அதற்குப் பிறகு திருமலையேறி, வராக தீர்த்தக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வராகரை தரிசிக்க வேண்டும், 

அதற்குப் பிறகுதான் மலையப்பன் என்று சொல்லப்படும், ஏழுமலையானை, கோவிந்தனை, வேங்கடவனை சேவிக்க வேண்டும்!

 ராமானுஜர் காலத்திலிருந்து அவர் தொடங்கி, பின்னால் வந்த அனைத்து ஆசார்யார்களும் கடைபிடித்து வந்த சம்பிரதாயம். 

கோவிந்தராஜப் பெருமாள் வேங்கடவனின் அண்ணன் என்று போற்றப்படுகிறார். 

சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை திருச்சித்திரகூடத்தானான கோவிந்தராஜனே இவர் என்று புராணம் சொல்கிறது. 

 தில்லை கோவிந்தராஜன் இந்தப் பகுதிக்கு வந்திருந்தபோது, இந்த இடத்தின் எழிலில் மனதைப் பறிகொடுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவருக்காக ஒரு கோயில் எழுப்பப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 

அதே சயன கோலத்தில் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளும். அற்புதமாக தரிசனம் தருகிறார், 

இவருடைய கோயில் மிகப் பெரியதாக விளங்குகிறது. 

பளபளக்கும் கலசங்களுடன் மின்னும் ராஜகோபுரத்தினுள் சென்றால் வலது பக்கத்தில் நரசிம்மர் நமக்கு ஆசியளிக்கிறார். 

அடுத்து இரு புறங்களிலும் மணவாள மாமுனிகள், ரங்கநாத சுவாமி, சக்கரத்தாழ்வார், கோதண்டராமர் ஆகியோர் சந்நதிகள் நம்மை வாழ்த்தி மூலவர் அருளாசி பெற அன்புடன் உள்ளே அனுப்பி வைக்கின்றன. 

கோதண்டராமர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். கண்கள் இரண்டும் ஜொலிக்கின்றன. வட இந்தியப் பாணியில் காட்சிதரும் இவரை அயோத்தியின் சக்கரவர்த்தி என்று விவரிக்கிறார்கள். 

காசியைச் சேர்ந்த பைராகி மடம் எனப்படும் பூகா மடத்தின் ஆதரவில் இந்த ராமர் கோயில் துலங்குகிறது. இவருக்கு எதிரே ராமர் அபிஷேகத்துக்கு  நீரெடுத்துச் செல்லும். பூகா தீர்த்தம் அமைந்துள்ளது. 

 புண்டரீகவல்லித் தாயார் அருள் பொழிகிறாள். தாயாரின் உற்சவ விக்ரகம் மஹாலக்ஷ்மியாக வணங்கப்படுகிறது. தாயாரின் கருணை ததும்பும் விழிகள் பரிவுடன் நோக்குவதிலேயே வேங்கடவனின் தரிசனம் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது. 

அனந்தாழ்வார், மதுரகவி ஆழ்வார், கூரத்தாழ்வார், ராமானுஜர், கல்யாண வெங்கடேஸ்வரர் ஆகியோர் அடுத்தடுத்து கொலுவிருந்து தாயாரின் அருளை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். பின்னால் யாகசாலை. 

கருவறையை வலம் வந்தால் சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் கருடாழ்வாரும் பலம் தருகிறார்கள்..

கருவறையில் கோவிந்தராஜப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். 

 தில்லை கோவிந்தராஜனை தரிசித்தவர்கள், இந்தத் திருவுருவைக் காணும்போது, சிதம்பரத்தில்தான் இருக்கிறோமோ என்று வியக்கும் வகையில் அதே தத்ரூப அமைப்பு. 

 இவர் காலடியில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தம் அகங்காரத்தை சமர்ப்பித்து சரணடைந்திருக்கிறார்கள். திருப்பாற்கடல் காட்சியாக, ஆதிசேஷன் மீது, நான்கு திருக்கரங்களுடன் சயனித்திருக்கிறார் பெருமாள்.  
திருமலையில் வேங்கடவன் கோயில் கொள்வதற்கு முன்னாலேயே இவர் இங்கே, திருப்பதியில் ஸ்தாபிக்கப்பட்டதால் இவரை ஏழுமலையானுக்கு அண்ணன் என்று சொல்கிறார்கள். 

 மலைமீது தம்பிக்கு வசூலாகும் காணிக்கைகளை தினமும் பல்லக்கு மூலமாக சுமந்து வந்து இந்த அண்ணனிடம் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. 

தம்பியின் வருமானத்தை முறைப்படுத்திப் பாதுகாக்கும் ஆடிட்டர், இந்த அண்ணன்! மொத்தப் பணம், நகைகள், பிற காணிக்கைகளைக் கொண்டுவரும் அந்த சம்பிரதாயம் இப்போது மாறி, கணக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். 
இதனாலேயே முதலில் இவரை தரிசித்து வேங்கடவரை தரிசிக்க அனுமதி பெற வேண்டும் என்பது சம்பிரதாயமாம்.

இந்த கோவிந்தராஜர் 1500 ஆண்டுகளுக்கு முந்தி இங்கு கோயில் கொண்டவர் என்கிறார்கள். 

கோயிலில் ருக்மிணி, சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிப் பெருமாளை அமர்ந்த கோலத்தில் தரிசிக்கலாம். 

கையில் செங்கழுநீர் புஷ்பத்துடன் ஆண்டாள், வித்தியாசமாக கோவிந்தராஜருக்கு வலது பக்கத்தில் சந்நதி கொண்டிருப்பதும் தனி விசேஷம் 

கோவிந்தராஜரை தரிசனம் பண்ணிவிட்டு, அடுத்ததாக திருச்சானூரில் கோலோச்சும் அலர்மேல்மங்கைத் தாயாரை சேவிக்கலாம். 

தனித்திருந்து, திருமாலின் பெருமைகளை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறார், அலர்மேல்மங்கை என்னும் பத்மாவதி தாயார்
பத்மஸரோவரம் என்ற பத்மாவதி தீர்த்தத்திலிருந்து புறப்பட்டு வந்து,  குளிர்விக்கும் தென்றல் இனிமையானது..

சற்றுத் தொலைவிலுள்ள ஸ்வர்ணமுகி ஆற்றிலிருந்து இந்த தீர்த்தத்துக்கு நீர் வருவதாகச் சொல்கிறார்கள். 

கார்த்திகை மாதம் சுக்ல பட்ச பஞ்சமி நாளன்று தாயார் பிரம்மோத்ஸவ கொண்டாட்டத்தின்போது இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.
அத்தாணி மண்டபம். உள்ளே தாயார் திவ்ய தரிசனம் தருகிறார். 

உற்சவரின் சிரசின் மீது தங்கத் தாமரை கவிழ்த்து வைத்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். 
வெண் பட்டாடை அணிவித்து வைரப் பதக்கமும் மங்கலத் தாலியும் நகைகளும் பூட்டி பேரழகு செய்திருக்கிறார்கள்.  

இந்த அன்னை மேளதாளங்கள் முழங்க, தீவட்டி ஒளி வழிகாட்ட, பிராகார வலம் வருகிறாள். 
தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் விசேஷம். 
தை வெள்ளிக்கிழமைகள் அதி விசேஷம். 

திருமணம், பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்ப்பிக்கிறார்கள். 

இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரைச் சுற்றி வைத்து, வேறு அலங்காரங்களும் செய்து அர்ச்சனை, தீபாராதனை செய்கிறார்கள். இவ்வாறு சரடு சமர்ப்பிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகின்றன. 
இந்த தலம் கிருஷ்ணர், தாயார் கோயிலுக்காகத் தந்த இடம் என்கிறார்கள். இதற்கு சாட்சியாக கோபுரத்துக்கு நேராக கிருஷ்ணர் விக்ரகம் ஆசியளிக்கக் காணலாம். 
அண்ணன் பலராமருக்கு, ‘தவம் செய்ய சிறந்த தலம் இது’ என்று பூமியைச் சுட்டிக் காட்டியபடி கிருஷ்ணர் யோசனை சொல்ல, அதன்படி பலராமர் தவம் மேற்கொண்ட தலம். அதே கோலத்தில் கிருஷ்ணரை இங்கே தரிசிக்கலாம். பலராமர் பாதரட்சையுடன் காணப்படுகிறார். அதாவது யாத்திரைக்குக் கிளம்பி வரும் கோலம்.

  ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சௌந்திரராஜப் பெருமாளையும் தரிசிக்கலாம். தாயாரின் சந்நதியில் நித்ய கல்யாணப் பெருமாளாக ஸ்ரீநிவாசன் சேவை சாதிக்கிறார்.     
    
பத்மாவதி தாயாரை சுயம்பு வடிவம் .  தலம் ஸ்ரீபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தாயாரை உளமாற சேவித்து திருமலையேற அனுமதியும் பெற்றுக் கொள்வோம். 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28