MENU

Show more

சட்டவிரோத " பண்ட்" வட்டி தொழில்..

பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு ஆசைப்பட்டு... 'பண்ட்' நடத்தி வட்டிக்கு வட்டி!


கோவை : கந்து வட்டி கொடுமையின் விபரீதங்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், 'பண்ட்' நடத்தும் நபர்கள் அந்த பணத்தை அதிக வட்டிக்கு விட்டு, மிரட்டி வசூலிப்பது தெரியவந்துள்ளது; வட்டிக்கு பணம் வாங்கும் தொழிலாளர்கள் குண்டர்களின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்.

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கூலி தொழிலாளி குடும்பமே, 'கெரசின்' ஊற்றி தற்கொலை செய்து கொண்டது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கந்து வட்டி தொடர்பான புகார்களை அளிக்க போலீசார் பிரத்யேக 'வாட்ஸ் ஆப்' எண்களை அளித்துள்ளனர். கோவை உள்பட பல்வேறு இடங்களில் கந்து வட்டி மிரட்டல் தொடர்பான புகார்கள் போலீசாருக்கு குவிந்த வண்ணம் உள்ளது.இதற்கிடையே கந்து வட்டி போன்று பண்டிகை கால 'பண்ட்' நடத்தி, அந்த பணத்தை வட்டிக்கு விட்டு மிரட்டுவதும் நடந்து வருகிறது தெரியவந்துள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் தீபாவளி, பொங்கல் 'பண்ட்' நடத்தப்படுகிறது. பண்டில் சேருபவர்கள் முன்பணமாக ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். இதன்பின், வாரந்தோறும், 100 ரூபாய் வீதம், 50 வாரங்கள் கட்ட வேண்டும். இவ்வாறு கட்டி வந்தால், தீபாவளி போன்ற பண்டிகை நேரத்தில் 'பண்ட்' பிரிக்கப்படும்.

பண்டில் சேர்ந்தவர்களுக்கு, முன்பணத்துடன், 6,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை வழங்கப்படும். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பண்டில் கூலி தொழிலாளிகள், ஆட்டோ டிரைவர்கள் என, ஆயிரக் கணக்கானோர் சேர்ந்து வருகின்றனர். பண்ட் நடத்தும் நபர்கள், முதலீடு இல்லாமல் கிடைக்கும் இந்த பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஒரு பண்டில் சேரும்போது, ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுக்க வேண்டும். சுமார், 100 பேர் ஒரு பண்டில் சேர்ந்தாலே, ஒரு லட்சம் ரூபாய் சேர்ந்து விடும். இந்த பணத்தை 'பண்ட்' நடத்துபவர்கள் வட்டிக்கு கொடுக்க துவங்குகின்றனர்.இவர்களிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டால், ஆயிரம் ரூபாய் வட்டியை எடுத்து கொண்டு, 9,000 ரூபாய் கடன் கொடுப்பார்கள். பின், வாரம் ஆயிரம் ரூபாய் வீதத்தில் பத்து வாரத்தில், பத்தாயிரம் ரூபாயை கட்ட வேண்டும். ஒரு வாரம் கட்ட தவறினாலும், அந்த ஆயிரம் ரூபாய்க்கு வட்டிக்கு வட்டி போட்டு விடுவார்கள்.

இதுபோன்று வட்டிக்கு வட்டி கட்டியே பலரும் பாதித்து வருகின்றனர். வட்டி கட்ட தவறினால் வீடுகளுக்கு சென்று மனைவி, குழந்தைகளை குண்டர்கள் மூலம் மிரட்டுகின்றனர். பெரும்பாலும் அனுமதியில்லாமலேயே இதுபோன்ற பண்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால், விரைவில் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணம் கட்டக் கூடாது!
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, 'அனுமதியில்லாமல் நடத்தப்படும் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் ஒருபோதும் பணத்தை கட்ட கூடாது என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், பெரும்பாலோனார் அறிவுரைகளை காதில் வாங்கி கொள்வதே கிடையாது. பணம் போட்டு ஏமாந்த பின் தான் புகார் அளிக்கின்றனர். பொதுமக்களிடம் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்' என்றனர்.
செய்தி : தினமலர் 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28