MENU

Show more

உலகப் புத்தக தின விழா... பாதி விலையில் புத்தகங்கள்

*உலகப் புத்தக தின விழா... பாதி விலையில் புத்தகங்கள்!*

*- இரா.தமிழ்க்கனல்*

என்னதான் தகவல்தொடர்புத் துறை வளர்ச்சியானது வேகமாக இருந்தாலும், புத்தகம் வாசிக்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்து விடவில்லை. தமிழகம் முழுவதும் புத்தகக்காட்சிகள் அதிகரித்து வருவதே இதற்கு சாட்சி. எல்லா நகரங்களிலும் புத்தகக்காட்சிகள் நடந்தாலும், சென்னையில் நடக்கும் புத்தகக்காட்சிகளுக்கு தனி மவுசு உண்டு.

ஏப்ரல் 23-ம் தேதி வரும் உலகப் புத்தக தினத்தையொட்டி, *வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை சென்னைப் புத்தகச் சங்கமம் நடத்தப்படுகிறது.*

வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் ஆறாவது ஆண்டாக நடக்கவுள்ள *இந்தப் புத்தகக்காட்சியை, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைக்கிறார்.*

 உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23) *கவிஞர் வைரமுத்து உரையாற்றுகிறார்.*

 24-ம் தேதி ‘நான் ஏன் (சு)வாசிக்கிறேன்’ என்ற தலைப்பில் கவிஞர் ஜோ மல்லூரியும் இயக்குநர் கவிதாபாரதியும் பேசுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிப் புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறும்.

காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் *அனைத்துப் புத்தகங்களும் பாதி விலைக்கே விற்கப்படும் என்பதுதான் சிறப்பு!*

‘‘சென்னை ஜனவரி புத்தகக்காட்சிப் பரபரப்பில் கவனிக்கப்படாமல் போகும் புத்தகங்களை, இந்தப் புத்தகக்காட்சியில் வாசகர்கள் வாங்கிச்செல்வது வழக்கமாக இருக்கிறது’’ என்கிறார்கள், பதிப்பாளர்கள் பலரும். 

புத்தகக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரின்ஸ் என்னாரெஸ், ‘‘உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணரவைப்பதும் புத்தகங்களைக் கொண்டாடச்செய்வதும்தான் நோக்கம். இத்துடன், புத்தக வங்கி எனும் திட்டத்தையும் செயல்படுத்திவருகிறோம். வாசகர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை இங்கு வந்து கொடுத்தால், அவற்றைக் கிராமப்புற நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்குகிறோம். புத்தகங்களை வழங்குவோரை ஊக்குவிக்கும்வகையில் *‘புத்தகக் கொடைஞர்’* எனும் சான்றிதழை அளிக்கிறோம். இத்திட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகளில் 25 ஆயிரம் புத்தகங்களை அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம் ஆகிய ஊர்களில் உள்ள நூலகங்களுக்கு வழங்கியிருக்கிறோம்’’ என்றார் உற்சாகத்தோடு.

தனிப்பட்ட முயற்சியில் புத்தகங்களைப் பாதுகாத்து, மக்கள் பயன்படுத்தும்வகையில் செய்பவர்களுக்கு, புத்தகர் விருதும் வழங்கப்படுகிறது. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பெற்றுள்ள இந்த விருதை, இந்த ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசுவும் வேலூர் லிங்கம் என்பவரும் பெறுகின்றனர்.

குழந்தைகளுக்கான கதை சொல்லல், தவறின்றித் தமிழ் அறிவோம், அறிவியலாளரைக் கேளுங்கள் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. கொளுத்தும் வெயிலுக்கு ‘குளுகுளு’ வசதியுள்ள அரங்கு, வாசகர்களுக்கு இதமாக இருக்கும் என்பது உறுதி!

- இரா.தமிழ்க்கனல்

*நன்றி: 'ஜூனியர் விகடன்' - 22-4-2018*

https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-22/society-/140269-chennai-book-fair.html

*Visit: chennaiputhagasangamam.com*

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026