MENU

Show more

ஆதார் லீக்ஸ்..

🌺ஆதார் தகவல்கள் அமெரிக்கா கையில்?🌺

அந்தரங்கம்
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுபற்றி ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட்ட நிலையில்...

உலக ரகசியங்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தில், ‘இந்தியாவின் ஆதார் தகவல்கள் ஏற்கெனவே அமெரிக்காவால் திருடப்பட்டுவிட்டன’ என்று ஆகஸ்டு 25ஆம் தேதி வெளியான தகவல் இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது.

இதுபற்றி தகவல் வெளியிட்டிருக்கும் விக்கிலீக்ஸ், சுமார் நூறு கோடி மக்களின் கைரேகை, கண்ரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் அடையாளங்கள் பதியப்பட்டிருக்கும் இந்தியாவின் ஆதார் விவரங்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. ஏற்கெனவே கையகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

Cross Match என்ற அமெரிக்க நிறுவனம், பயோ மெட்ரிக் சாஃப்ட்வேரில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம். இந்த நிறுவனம்தான் இந்தியாவில் ஆதார் அட்டைக்குத் தேவையான பயோ மெட்ரிக் அடையாளங்களைப் பதிவுசெய்யும் கருவிகளை வழங்கியது. இந்த நிறுவனத்தின் இந்திய பார்ட்னரான, ‘ஸ்மார்ட் ஐடெண்டிட்டி டிவைஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம்தான் கிராஸ் மேட்ச் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் ஆதார் தகவல்களைப் பதிவு செய்யும் பணிகளைச் செய்திருக்கிறது.

இதே கிராஸ் மேட்ச் அமெரிக்க நிறுவனம்தான் அமெரிக்க புலனாய்வு முகமையான சி.ஐ.ஏ-வுக்கும் கணினி தொடர்பான திட்டமிடல்களை வகுத்து தருகிறது. எனவே, இந்த நிறுவனத்தின் உதவியுடன் எக்ஸ்பிரஸ் லேன் என்ற சாஃப்ட்வேர் மூலம் சி.ஐ.ஏ. ஆதார் தகவல்களை ஒட்டுமொத்தமாக தனது கைக்குள் கொண்டு சென்றுவிட்டதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.

இதுபற்றி இதுவரை கிராஸ் மேட்ச் நிறுவனம் பதில் தரவில்லை.

ஆதார் என்பது இந்தியா போன்ற பலகோடி மக்கள் கொண்ட நாட்டுக்குச் சரிவராது என்றும் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் அடகு வைப்பது என்றும் விமர்சனங்கள் பல ஆண்டுகளாகவே எழுந்து வந்த நிலையில்... விக்கிலீக்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

சி.ஐ.ஏ-வில் பணியாற்றிய கணினிப் பொறியாளர் ஸ்னோடென், 2013ஆம் ஆண்டு, சொந்த நாட்டு மக்களின் தொலைபேசி உரையாடல்களையும், மின்னஞ்சல் உள்ளிட்ட இதர தகவல் பரிமாற்றங்களையும் உளவு பார்க்கச் சொன்னதாக அமெரிக்க அரசுமீது புகார் சொல்லிவிட்டு, பணியில் இருந்து வெளியேறினார். நாட்டைக் காட்டிக்கொடுத்ததாக அவர்மீது மிகத் தீவிரமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறது அமெரிக்கா.

இப்போது ரஷ்யாவில் இருப்பதாக சொல்லப்படும் ஸ்னோடென் அளித்த பேட்டியில், உலகில் 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த விவரத்தை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியத் தூதரகமும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். .

அமெரிக்காவால் அதிகம் கண்காணிக்கப்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்கிறது ஓர் ஆய்வு.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான ஜீண்ட்ரீஸ் என்பவர், ‘ஆதார் அடையாள எண் திட்டம் மக்களை வேவு பார்ப்பதற்கு சிறந்த கருவியாகப் பயன்படும்’ என்கிறார்.

ஆதார் என்பது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு செயல் என்று எதிர்க்குரல்கள் எழுந்தாலும்... எங்கும் ஆதார், எதற்கும் ஆதார் என்று விடாப்பிடியாக இருக்கிறது அரசு. இந்த நிலையில்தான், விக்கிலீக்ஸ் செய்தி இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அரசுத் தரப்பில் விக்கிலீக்ஸ் செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

’அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான்’ என்று நம்மூரில் சொல்வார்கள். இனி, நம் அந்தரங்கம் எல்லாம் அமெரிக்கா அறியுமோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026