MENU

Show more

ஆசிரியர் தின வாழ்த்துகள்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

இந்தியாவின் தலைசிறந்த தத்துவ ஞானியும் அரசியல்வாதியுமாக புகழ்ப்பெற்றவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ராஜேந்திர பிரசாத் அவர்கள் குடியரசு தலைவராகப் பொறுப்பு வகித்த போது அவருடன் இணைந்து துணை குடியரசு தலைவராக பணியாற்றினார். பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். தத்துவ நூல்கள் மட்டுமின்றி “லீலாவின் குற்றம்” என்ற நாவலை எழுதியும் புகழ்ப்பெற்றவர். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. அவருடைய சேவையை பாராட்டி 133 கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் முக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. தன்னுடைய வாழ்க்கையை ஆசிரியராகத் தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்தவர். தன்னுடைய பிறந்த நாளை பிறர் கொண்டாட ஆசைப்பட்ட போது, தான் மிகவும் நேசித்த ஆசிரியர் பணியை கௌரவிக்கும் விதத்தில் , அவர்களின் உழைப்பை போற்றும் வகையில், தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் படி கேட்டுக்கொண்டார்.

ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் , சர்வபள்ளி வீராசாமிக்கும் சீதம்மாவிற்கும் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.

தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார். இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது. மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் கொல்கத்தா புறப்பட்ட போது, அவருக்கு பிரிவு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவின் முடிவில் ரயில் நிலையம் வரை குதிரை வண்டியில் பயணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அவரிடம் பயின்ற மாணவர்களோ குதிரைகளுக்கு பதில் தாங்களே தங்களுடைய ஆசானை வண்டியில் அமர்த்தி இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்வு ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி அதை பார்த்த மக்களுக்கும் மன நெகிழ்வை தந்தது. மாணவர்களின் தோளில் கைபோட்டு, நட்புணர்வுடன் பழகும் குணம் அவரிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கருத்தை தெளிவுடனும், ஆணித்தரமாகவும் தெரிவிக்கும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார். 1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். 1962ல் இந்திய குடியரசுத் தலைவவராக அவர் இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது. தன்னுடைய பதவிக் காலம் முடிந்தவுடன் சென்னை மைலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டில் குடியேறினார்.

ராதாகிருஷ்ணன் அவர்கள் சிவகாமு என்பவரை தன்னுடைய பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் பிறந்தனர். சர்வபள்ளி கோபால் என்ற மகன், பிற்காலத்தில் வரலாற்றுத் துறையில் முக்கிய பங்கு வகித்தார். சிவகாமு 1956-ம் ஆண்டு இயற்கை எய்தினார். ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது. ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.

செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் ஆக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026