MENU

Show more

தலையங்கம் - தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?

தமிழக கலாச்சாரம் சீரழிந்து விட்டதா ?
          Image courtesy : tutacare.com

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை எண்ணி " தமிழகத்தில் தொடரும் பாலியல் கொடூரங்கள் நெஞ்சை உறைய வைக்கின்றன ... சுவாதி படுகொலை , கடந்த ஆண்டு ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு சிறுமிக்கு நடந்த கொடூரம் யாருக்கும் மறந்திருக்காது , அதனை தொடர்ந்து பல கொடூரங்கள் எண்ணிலடங்கா...

பொள்ளாச்சி , சேலம் , மனதை உலுக்கி போடும் கோவை சம்பவம் - என்னதான் பிரச்சனை தமிழ்நாட்டிற்கு...

வீரத்திலும் , தியாகத்திலும் உயர்ந்தோங்கிய தமிழர் குடியில் இன்று காமத்திற்கு ஆளாகி பல கொடூரங்களை செய்வது எதனால் ?

தண்டனைகள் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாகுமா , இயல்பாகவே நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுபட்டு அறவழியில் பயணிக்கும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவலநிலை ?

ஊற்றுக்கண்ணை தேடி வேரறுப்பதை தவிர வேறு வழியில்லை ... 8 கோடி பேர் வாழும் இம்மண்ணில் வேலி போல இருக்க ஆண்மக்கள் , தாயாக , சகோதரியாக, மகளாக , தோழியாக இருக்கும் பெண்களுக்கு எதிராக வன்புணர்வு செய்வது தகுமா ?

எதனால் இந்த காம கொடூரங்கள் , தமிழக ஆண்மக்களிடையே ஒருவித மனநோய் ஏற்பட்டுள்ளதா , அவர்கள் இயல்பிற்கு புதிதான சமூக ஊடகங்களை பயன்படுத்துவதும் , ஊடகங்களை சினிமாக்களை பார்ப்பதும் ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்பதே நிதர்சனம்...

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாசங்களை பார்ப்பதுவும் , சினிமாவில் வரும் அந்தரங்க காட்சிகளும் இருபாலரின் மனதிலும் நஞ்சை விதைத்து வருகிறது என்பதை மறுக்கவியலாது...

தன்னை மதிக்கும் , தன்னை மேம்படுத்தி கொள்ள நினைக்கும் எந்த ஆண்மகனும் இழிசெயலை செய்யமாட்டார்கள் , போதாக்குறைக்கு நன்னெறியினை போதிக்க வேண்டிய மத குருமார்களும் தவறான வழியில் ஈடுபடுவது இன்னும் கீழான அவலநிலை ...

தன் வரலாற்றினை மறந்த தமிழன் இன்று தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறான் , உலகிற்கே நாகரிக கற்று தந்த தமிழ்ச்  சமுதாயம் இன்று மேலை நாகரிக கலப்பினால் கற்பிழந்து அநாகரிமாக நிற்கிறது...

சினிமா எனும் சக்தி வாய்ந்த மீடியா வெறும் காதலையும், காமத்தையும் காட்டி காசு பார்ப்பதன் விளைவிது , தணிக்கை செய்யாமல் தாறுமாறான திரைக்கதைகளோடு வெளிவரும் படங்களை தடுத்தாலே தமிழ்ச் சமூகம் கொஞ்சமாவது நிம்மதி பெரு மூச்சு விட முடியும்...

ஊருக்கு ஊர் மதுக்கடைகளை திறந்து மனம்மாறி போய்விட்டது தமிழகம் , அனைவரும் அறநெறி தவறியதால் இன்று தடைசெய்யப் பட்ட போதை பொருள்கள் கூட தாராளமாக வீதிக்கு வீதி பெட்டிகடைகளில் மலிந்து கிடக்கிறது...

யாராவது தவறு செய்துவிட்டு போகட்டும், எனக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் இந்த கொடூரங்களுக்கு காரணமாக கூற முடியும்...

 கூட்டத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் போதும் தவறுகளை ஓரளவுக்கு தடுக்க முடியும் , தமிழ்ச் சமூகம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணமிது...

நீண்ட நெடிய தமிழக கலாச்சார விழுமியங்களை பின்பற்றினால் மட்டுமே இத்தகு கொடூரங்களை தடுக்க முடியும்...

அறநெறி தழைத்தோங்கும் தமிழக வரலாற்றினை ஒவ்வொரு குடிமகனும் அறியும்படி செய்ய வேண்டுமெனில் அரசும் , ஊடகங்களும் , சினிமாத் துறையும் , பெற்றோர்களும் தத்தம் கடமை உணர்ந்து நீதியின் பக்கம் நின்றால் மட்டுமே சாத்தியம்...

ஆன்ட்டி வைரஸ் போட்டு கணிப்பொறிகளை பாதுகாப்பது போல , தமிழ்மறை எனும் ஆன்ட்டி வைரஸை பின்பற்றுவதும் , மறந்து போன கிராமத்து பழக்க வழக்கங்களை மீட்டுக் கொணர்வதும் , மீண்டும் நாம் புதுமை கலந்த பழமைக்கு திரும்புவதே தமிழ்நாட்டிற்கும் , தமிழக மக்களுக்குமான ஒரே வழி .

பெரும்பாலான கிராமங்களின் பெண்தெய்வ வழிபாட்டு அமைப்பு தரமானதாக உள்ளதாக கருதலாம். ஒரு அம்மன் (தாய் தெய்வம்) கோயில் கிராமங்களின் மையத்தில் அமைந்தும். மேலும் அதில் ஒரு ஆண் காவல் தெய்வமும் உள்ளதாக அமைக்கப்பட்டதாக இருக்கும்.... இதுபோன்ற பழந்தமிழ் கலாச்சாரங்களை ஒவ்வொரு கிராமந்தோறும் ஊக்குவிப்கதன் மூலம் பெண்டிருக்கு காவலாக ஆடவர்கள் எனும் உயரிய எண்ணம் மனதில் பதியும்...

அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு  எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம்... இத்தகு ஒழுக்கத்தை பள்ளிகளிலும் , வீட்டிலும் குழந்தைகளுக்கு போதித்து பின்பற்ற செய்வதன் வாயிலாக அறம் போற்றும் தமிழ்ச் சமூகத்தை மீட்டுக் கொணர முடியும்...

ஒழுக்க நெறிகளை காலத்திற்கேற்ப ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடையே பரப்ப செய்ய வேண்டும்...

காதல் என்பது அவசரகதியில் நடந்தால் தடுமாற்றங்களை சந்திக்க வேண்டும், வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல காதல் , உண்மையும் ஒழுக்கமும் நிறைந்தே காதல் என்பதை அனைவரையும் உணரச் செய்ய வேண்டும்....

அவ்வாறு பழந்தமிழ் நெறிகளை பின்பற்ற தவறியதால் ஏற்படும் விளைவுகளே இத்தகு கொடூரங்கள் ...

இந்த அளவிற்கும் அறநெறிகளை போதிக்க இயலவில்லை என்றால்  இச்சையை தீர்த்துக் கொள்ள விபாச்சாரத்தை வீதிக்கு வீதி திறப்பதே தமிழர்களின் தலைவிதியாகும்...

நன்றி !!!

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28