MENU

Show more

ஜி.எஸ்.டி மசோதா - சிறப்பு பார்வை

ஜி.எஸ்.டி மசோதா - சிறப்பு பார்வை

மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு விரும்புகிறது. இதற்கு வழிவகை செய்யும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த ஏப்ரல் 24-ந்தேதி தாக்கல் செய்தார்..
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன் மீது கலால் வரி, சேவை வரி, அந்தப் பொருட்களை வர்த்தகத்திற்காக மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் போது நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி என பல வரிகள் விதிக்கப்படுகிறது.
அதே போல பொருட்களை இறக்குமதி செய்தால், அவற்றின் மீது சுங்க வரி விதிக்கப்படுகிறது.
இதுபோல் ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி மேல் வரி விதித்து வரிக் கட்டமைப்பை சீர்குலைப்பதாகவும், இது பொதுமக்களுக்கு வரிச் சுமையை ஏற்படுத்துவதாகவும், இதனால் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாகவும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல வித மறைமுக வரிகளை ஒன்றிணைத்து சீர்ப்படுத்தி ஒரே வரியாக செயல்முறைப்படுத்தும் நடவடிக்கையை பாஜக அரசின் நிதியமைச்சகம் எடுக்க ஆரம்பித்தது.
இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகளிடம் இன்னும் ஒத்த கருத்து ஏற்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமே இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எல்லா மாநிலங்களும் இந்த`நடவடிக்கைக்கு இசைவு தெரிவிக்கவில்லை என்பதே நிதர்சனம்.
மத்திய அரசோ இந்த சட்டத்தை நிறைவேற்றிட தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஜி.எஸ்.டி மசோதாவில், மத்திய உற்பத்தி வரி, மாநில அரசுகளின் மதிப்பு கூட்டு வரி, கேளிக்கை வரி, ஆக்ட்ராய் என்னும் உள்ளூர் வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி என எல்லா வரிகளையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக அமையும் வகையில் புதிய வரி முறையானது கட்டமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வரிவிதிப்பு திட்டத்தை தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சட்ட திருத்த மசோதாவை பல மாநில அரசுகள் எதிர்ப்பதற்கு காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சில கவலை அளிக்கக்கூடிய அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதே எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப் படும் பொருட்கள், மது வகைகள் இவற்றின் மீதான வரி ஜி.எஸ்.டி.யில் இருந்து நீக்கப் பட்டுள்ளது மாநில அரசுகளுக்கு சாதகமானது என்றாலும், மாநில அரசுகளின் நிதி சுதந்திரம் பறிபோகும் அம்சங்கள் தற்போதைய ஜி.எஸ்.டி மசோதாவில் சேர்க்கப்பட்டிருகிறது.
இது மாநிலங்களின் வரி விதிப்பு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.
புகையிலை மற்றும் புகையிலை பொருட்களுக்கு, கூடுதல் வரியை விதிக்கும் மாநிலங்களுக்கு இந்த மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை.
புகையிலையை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் விதிக்கும் புகையிலைக்கான கூடுதல் வரியை நீட்டிக்க அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் புகையிலை மற்றும் புகையிலை தயாரிப்பு பொருட்கள் மீது மாநில அரசுகள் கூடுதல் வரி விதிப்பதற்கு திருத்தப்பட்ட மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) தற்போது மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ளது.
மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. புதிய சட்டதிருத்த மசோதாவின்படி, இவற்றின் மீதான அதிகாரம் ஜி.எஸ்.டியின் கீழ் வருகிறது.
இதன் மூலம் மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும். எனவேதான் பெட்ரோலிய பொருட்கள் மீது கூடுதல் வரியை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தேவை என பல மாநில அரசுகள் வற்புறுத்துகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்றால் மதிப்பு கூட்டு வரி, மத்திய கலால் வரி, சேவை வரி ஆகியவற்றை வசூல் செய்வதையும், உரிய மாற்று திட்டங் களை செயல்படுத்துவதையும், மாநில அரசின் வரம்பிற்குள் ஒப்படைக்கும் வகையில், ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் நிதியமைச்சர் அருன்ஜேட்லியோ, ‘சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதாயத்தை மட்டுமே தரும் ஒரு நடவடிக்கை. இந்த மசோதாவால் வரி வசூல் மற்றும் வர்த்தக நிலை பாதிப்புபோன்ற எந்த விதமான பாதகமான நிலையும் உருவாகாது’ என்கிறார்.
‘இந்த சட்டம், மத்திய அரசு, மாநில அரசுகள் என இரு தரப்புக்கும் பலன்தரக்கூடியது தான். புதிய சட்டம் அமலுக்கு வருகிறபோது, அது நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி பெருக்கத்துக்கு உதவும்.
நாட்டின் வருமானமும் கூடும். மத்திய, மாநில அரசுகள் என இரு தரப்புக்கும் சரக்குகள், சேவைகள் மீது வரி விதிக்கும் அதிகாரம் உண்டு.
இந்த மசோதாவை அமலுக்குக் கொண்டு வருவதன் மூலம், நாட்டின் வளர்ச்சி குறுகிய காலகட்டத்தில் 1-3 சதவீத வளர்ச்சிக்கு உதவும். இதன் மூலம் 2015ஆம் வருடத்தின் மூடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதத்தை எட்டிவிட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் அதிக வரி வருமானம் தரும் மறைமுக வரிகளான உற்பத்தி வரி, சேவை வரிபோன்றவை புழக்கத்தில் இருந்து நீங்கும். அதேபோல் மாநில அரசுகளால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியான வாட் வரியும் விலக்கிக் கொள்ளப்படும். அதன்பின் மத்திய மாநில அரசுகள் தரப்பில் ஒரு முனை வரி விதிப்பு மட்டுமே அமலில் இருக்கும்‘ என்று அருன் ஜேட்லியால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல மாநில அரசுகள் இந்த மசோதாவை எதிர்க்கவே செய்கின்றன. ஆனால் நிதியமைச்சகமோ மாநில அரசுகளிடம் ஒத்த கருத்து உருவாகிவிட்டது என கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக 27 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரிவிகித அளவு உலக சராசரியை விட மிகவும் அதிகம் என தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக சராசரி 16.4 சதவீதம் உள்ள நிலையில் 27 சதவீதம் அளவுக்கு வரி விதிப்பது பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கிவிடும் என்பது தொழில் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
எனவே நிதியமைச்சகம் வரி குறைப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28