MENU

Show more

வெள்ளி திரை விமர்சனம்- புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

 புறம்போக்கு என்கிற பொதுவுடைமை
கம்யூனிஷம் சம்மந்தமாக படிப்பது மட்டும் இன்றி, தான் படித்ததை மக்களிடையே திரைப்படங்களின் மூலம் பகிர்ந்துக்கொள்ளும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இந்த படத்திலும் வித்தியாசமான ஒரு தளத்தில், கம்யூனிஷம் பேசுகிறார்.

ரயில் கடத்தல், இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக தூக்கு தண்டனை பெருகிறார் போராளி இயக்க தலைவரான ஆர்யா.

ஆர்யாவை சென்னையில் உள்ள சிறையில் தூக்கிலிட வேண்டும் என்றும், அனுபவமிக்க தூக்கு போடும் தொழிலாளியின் மூலம் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும், என்றும் நீதிமன்றம் உத்தரவிட, ஆர்யாவை தூக்கிலிடும் பொறுப்பை சிறை அதிகாரியான ஷாமிடம், மத்திய அரசு ஒப்படைக்கிறது.

டெல்லியில் இருந்து சென்னை சிறைச்சாலைக்கு ஆர்யாவை அழைத்து வரும் ஷாம், சிறை ரெக்காட்ஸ் படி, அனுபவமிக்க தூக்கு போடும் தொழிலாளியை தேடுகிறார். அதில், இறுதியாக தனது அப்பாவுக்கு பதில், அந்த வேலையை விஜய் சேதுபதி பார்த்ததாக தெரிய வருகிறது. உடனே விஜய் சேதுபதியை அணுகி ஆர்யாவை தூக்கிலிட அழைக்கிறார் ஷாம், ஆனால், அந்த வேலையை வெறுக்கும் விஜய் சேதுபதி, தன்னால் அது முடியாது, என்று மறுக்க, ஷாம் அவரை விடாமல் துரத்துகிறார்.

இந்த நிலையில், ஆர்யாவை காப்பாற்ற திட்டம் தீட்டும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்த கார்த்திகா மற்றும் அவருடைய ஆட்கள், ஆர்யாவை தப்பிக்க வைக்க விஜய் சேதுபதியை பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். அதன்படி, ஆர்யாவை பற்றி விஜய் சேதுபதியிடம் சொல்லி, அவரை தப்பிக்க வைக்க உதவி செய்ய கேட்கிறார்கள். அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதிக்க, திட்டம் அரங்கேறுகிறது.

ஒரு புறம் ஆர்யாவை தப்பிக்க வைக்க விஜய் சேதுபதியின் உதவியோடு கார்த்திகா திட்டமிட, மறுபக்கம், விஜய் சேதுபதியை தூக்கில் போடுவதையே தனது லட்சியமாக கொண்டு ஷாம் செயபடுகிறார். இறுதியில் ஆர்யா தப்பித்தாரா அல்லது தூக்கிட்டு கொள்ளப்பட்டாரா? என்பது தான் க்ளைமாக்ஸ்.

விறுவிறுப்பான திரைக்கதையோடு நம்மை சீட் நுணியில் அமர வைக்கும் ஜனநாதன், தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் சிந்திக்கவும் செய்ய வைப்பார். அப்படி ஒரு படம் தான் இந்த 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை'.

ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும், அவர்கள் இந்த படத்தில் ஹீரோக்களாக அல்லாமல் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

போராளி இயக்க தலைவராக பாலுசாமி என்ற வேடத்தில் நடித்துள்ள ஆர்யா, சிறை அதிகாரியாக மெக்காலே என்ற வேடத்தில் நடித்த ஷாம், தூக்கிலிடும் தொழிலாளியாக எமலிங்கம் என்ற வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி என மூன்று பேரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் குயிலி என்ற வேடத்தில் போராளி பெண்னாக நடித்துள்ள கார்த்திகாவின் பணியும் சிறப்பே.

ஏற்கனவே ஷாம், சில படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் ரொம்ப வித்தியாசமாக தனது கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார். அதேபோல, விஜய் சேதுபதியும் தனது இயல்பான நடிப்பின் மூலம் திரையரங்கை சில காட்சிகளில் கலகலப்பாக்குகிறார். இவர்கள் இருவருக்கும் வாய்ப்பை அதிகமாக கொடுத்த இயக்குனர், போராளியான ஆர்யாவை சிறையிலேயே வைத்து பூட்டி விட்டார்.

எஸ்.பி.ஜனநாதன் படங்களில், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் பணி ரொம்ப பேசப்படும். ஆனால், இந்த படத்தைப் பொருத்தவரையில், ஏகாம்பரத்தைக் காட்டிலும், கலை இயக்குனர் செல்வகுமார் பாராட்டைத் தட்டிச்செல்கிறார். அவர் போட்டுள்ள சிறைச்சாலை செட் பிரமிக்க வைக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பின்னணி இசையில் தனது திறமையை காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்தியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் வர்ஷனின் மெட்டுக்களில் பாடல்களின் வரிகள் புரியும்படி உள்ளது.

ஒரு சிறைச்சாலை, அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள், என்ற ரீதியில் படம் இருந்தாலும், பிரம்மாண்டத்திற்காகவும், ஆர்யாவுக்காகவும் இயக்குனர் பனி மலை, பாலைவனம் ஆகிய இடங்களுக்கு பயணப்பட்டு இருந்தாலும், அந்த காட்சிகள் திரைக்கதைக்கு எந்தவிதமான பலமும் சேர்க்கவில்லை. இருப்பினும் அந்த இடத்தில் பேசப்படும் வசனங்கள் நம்மை கவனிக்க வைக்கிறது.

சிறைச்சாலை என்ற ஒரே இடத்தில் படத்தின் பெரும்பாதி நகர்ந்தாலும், சிறைச்சாலை காட்சிகளும், அங்கு பேசப்படும் வசனங்களும் தான் படத்திற்கு பெரும் பலம். அதிலும், சிறையில் இருந்து ஆர்யாவை தப்பிக்க வைக்க கார்த்திகா போடும் திட்டமும், அதற்கு விஜய் சேதுபதி உதவி செய்வது, ஷாமின் கண்காணிப்பு உள்ளிட்ட காட்சிகள் பரபரப்பின் உச்சமாக உள்ளது.

விஜய் சேதுபதி, தான் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ததற்கான காரணத்தை சொல்லும் போது, ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பால் அதிர்கிறது. அதேபோல், இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் ஆர்யா, "இங்கு கழிவுகளை கொட்டாதீர்கள்" என்ற பலகையை காட்டும் காட்சி, ரொம்ப முக்கியமானது. மேலும், ராணுவத்திடம் நீங்கள் எல்லையை காப்பாத்துவீங்க, ஆனா மக்களை யார் காப்பாத்துவா?, என்று கேட்பது, ஒருவரை தூக்கிலிடும் போது, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விஷயங்களை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சொல்லியிருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

ஆர்யா சிறையில் இருந்து தப்பிப்பதற்கான திட்டமும், அதை செயல்படுத்தும் விதத்திலும், லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அவற்றை மறக்கடிக்க செய்யும் அளவுக்கு, படத்தின் இரண்டாம் பாதியில் ஷாம் எடுக்கும் தந்திர நடவடிக்கைகள், அதை அறியாமல் இருக்கும் விஜய் சேதுபதி, அதை அறிந்தும் அறியாமல் இருக்கும் ஆர்யாவின் நிலை உள்ளிட்ட காட்சிகள் அமைந்திருக்கிறது.

திரைக்கதையில் விறுவிறுப்பு, காட்சியில் சுவாரஷ்யம், வசனங்களில் வீரியம் என்று ஒட்டு மொத்த படத்தையும், திரைப்படமாக மட்டும் இன்றி, மக்கள் அரசியல் பேசும் படமாக உருவாக்கியுள்ள, 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படக்குழுவினருக்கு ஆயிரம் சல்யூட் வைக்கலாம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28