MENU

Show more

லோக் ஆயுக்தா - சிறப்புப் பார்வை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

*லோக் ஆயுக்தா என்றால் என்ன?*

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.

எத்தனை உறுப்பினர்கள்?
ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

*உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?*
முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.

*யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?*

பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி
(அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
(அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்

*வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?*
எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாது
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாது
அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாது
வேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது
45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது

*உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?*
5 ஆண்டுகள்.

*லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?*
லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்

*லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?*
இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்
இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்
இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
மாநில அரசு ஊழியர்கள்
அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்
இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.

*வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?*

எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லை
விசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்
யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்
எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்

*எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?*

இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்
பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வு
வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்
உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்
லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்
துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.
தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா?
சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

*வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?*

புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும்.

*விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?*

அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுந்தாது.

*விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?*

விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும்.

*நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?*

அரசு ஊழியருக்கு தமிழக அரசு,
சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர்,
அமைச்சர்களுக்கு முதலமைச்சர்,
முதலமைச்சருக்கு ஆளுநர்.

*புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?*
தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்
போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்
நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது

*லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?*
அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

*அது என்ன விதிகள்?*
நீதிபதிகளை பணிநீக்கம் செய்வது போன்ற நீண்ட நடைமுறை :
45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும்.
ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.
நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026