MENU

Show more

பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா அரசு ?

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் சட்டசபையில் நேற்று நடந்த விவாதம் :


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை நிறுத்தக்கூடிய அளவிற்கு, அவர்களுடன் பேச வேண்டும்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: போராட்டங்களை ஆரம்ப கட்டத்தில், தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டோரை அழைத்து பேசி, தீர்வு காண வேண்டும்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஊதிய குழுவின் பரிந்துரைகளை, அரசு முழுமையாக அமல்படுத்தி உள்ளது. 2017 - 18ல், மாநில அரசின் மொத்த வரி வருவாய், 93 ஆயிரத்து, 795 கோடி ரூபாய். இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திற்காக மட்டும், 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.


மேலும், ஓய்வூதியத் தொகை, 20 ஆயிரத்து, 397 கோடி ரூபாயையும் சேர்த்தால், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும், 65 ஆயிரத்து, 403 கோடி ரூபாய் செலவாகிறது. மொத்த வருவாயில், 70 சதவீதம், இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.


அரசு, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பெற்றுள்ள, கடனுக்கான வட்டி செலவு, 24 சதவீதம். மீதமுள்ள, 6 சதவீதம், மாநில வரி வருவாயுடன், மத்திய அரசிடமிருந்து பெறப்படும்,


வரி பகிர்வு உட்பட, 41 ஆயிரத்து, 600 கோடி ரூபாயை வைத்து தான், மக்களுக்கான நலத்
திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் வருவாயில், நிர்வாக செலவு மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. அரசு ஊழியர்கள், இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான், நல்லாட்சியை வழங்க முடியும்.


பழைய ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, விரைவில், அரசிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்போருக்கு, துணை போகக்கூடாது.


நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை, அரசு தயக்கமின்றி செயல்படுத்தும். ஊழியர்களுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.


ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஜூலை, 31க்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள் அடிப்படையில், அரசு உரிய முடிவுகளை எடுக்கும். அரசின் வருவாய் செலவினத்தை குறைப்பதற்கான வழிவகையை ஆராய, ஆதிசேஷய்யா குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அல்ல.


வரவுக்குள் செலவு இருக்க வேண்டும் என்ற நிலையை எடுத்துள்ள, தமிழக அரசின் நிலைபாட்டிற்கு ஒத்துழைக்கும் வகையில், அரசு ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு, அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!



ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை அழைத்து பேச, அரசு மறுத்து விட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நேற்று ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக, துணை முதல்வர் விளக்கம் அளித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, காலையில் சந்தித்தேன். 'உடலை வருத்தி, போராட வேண்டுமா' என, கேட்டேன். அதற்கு, தங்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். எனவே, அவர்களை அழைத்து பேச வேண்டும். இதற்கு, முதல்வர் பதிலை எதிர்பார்க்கிறேன்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்: அந்த அமைப்பினரை, நீங்கள் சந்தித்தபோது, 'இன்றைக்கு இருக்கிற அரசு, எதுவும் செய்யாது; நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் தான், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என, அவர்களை துாண்டி விடுகிற வகையில் பேசியுள்ளீர்கள்.


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: 'கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என, நீங்கள் கூறினால், நாங்கள் துாண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. துாத்துக்குடியில் நடந்த போராட்டம் போலவே, இப்போதும், நீங்கள் அழைத்து பேசும் நிலையில் இல்லை. இதை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: முதல்வர் அழைத்து பேச வேண்டும் என்பதை, அரசு ஏற்காததை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம்.


முஸ்லிம் லீக் - அபூபக்கர்: அழைத்து பேச முன்வராததால், வெளிநடப்பு செய்கிறோம்.


அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.


பின், முதல்வர் பழனிசாமி கூறியதாவது: ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டும் என்கின்றனர். அரசு எடுத்த நடவடிக்கையை, துணை முதல்வர் தெளிவுப்படுத்தி இருக்கிறார். குழு அறிக்கை தாக்கல் செய்த பின் தான், எதை நிறைவேற்ற முடியுமோ, அதை அரசு செய்யும்.


துாத்துக்குடியில், கலெக்டரும், சப் - கலெக்டரும், 14 முறை பேச்சு நடத்தினர். போராட்டக்காரர்களை அழைத்து பேசவில்லை என்று, ஸ்டாலின் கூறியது தவறானது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

நன்றி : m.Dinamalar.com
நாள் : 13.6.18 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28