TN STATE NEW SYLLABUS
மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!!!
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல்.
மாநிலக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி பாடத்திட்டங்களை மாற்றுவது, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து, தமிழக அரசு தனக்கெனத் தனியாக மாநில கல்விக்கொள்கை-2025-ஐ வடிவமைத்து வெளியிட்டிருந்தது.
இந்தக் கொள்கையைப் பின்பற்றி தற்போது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
`*உயர் மட்டக்குழு:*`
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்து ஆலோசித்து இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் துணைத் தலைவராகவும், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் நாராயணன், கணிதவியல் வல்லுநர் ராமானுஜம், கல்வியாளர் மாடசாமி உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
`*பாட வல்லுநர்கள் குழு:*`
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கல்விசார் கருத்துக்களைப் பெற்றும், மாநிலக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கென்று புதிய கலைத்திட்ட வடிவமைப்புக்கான பரிந்துரைகள் மற்றும் வரைவுப் பாடத்திட்டம் ஆகியவற்றை உருவாக்கி உயர் மட்டக்குழுவுக்குப் பரிசீலனை செய்ய பாட வல்லுநர்கள் அடங்கிய குழுவையும் பள்ளிக்கல்வித்துறை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் இந்தக் குழுவின் தலைவராகவும், வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுநர் கா.ராஜன், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் வெங்கடேஷ்வரன், இயற்பியல் வல்லுநர் ரீட்டா ஜான், தமிழ் வல்லுநர் சுதந்திரமுத்து உள்ளிட்ட 14 பேரும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 3 பேரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே பாடத்திட்டங்கள் கடந்த 2017-18-ம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்தக் குழு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில், 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பாடத்திட்டங்கள் 2026-27-ம் கல்வியாண்டுக்குள் மாற்றி அமைத்து நடைமுறைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 9 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு அடுத்த வரும் கல்வியாண்டிலும் செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Post a Comment