MENU

Show more

வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்

 வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்


வள்ளலார் காட்டிய வாழ்வியல் நெறிகள்

” அருட்பெருஞ்சோதி , தனிப்பெருங்கருணை , அருட்பெருஞ்சோதி ,

தனிப்பெருங்கருணை “ – திருவருட்பிரகாச வள்ளலார் என போற்றப்படும்

இராமலிங்க அடிகளார் அவர்கள் அவதரித்த தினம் ( 5 அக்டோபர் 1823 ) இன்று .

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் இராமையாப்பிள்ளை ,

சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார் பெருமகனார் .

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இராமலிங்கர் தாயார் மற்றும் சகோதர ,

சகோதரிகளுடன் பொன்னேரி பகுதியிலும் பிறகு சென்னை ஏழுகிணறு பகுயிலும்

வசித்து வந்தார். இவரது சகோதரர் இவரை கல்வியில் முன்னேற வைக்க

விரும்பினார் .  ஆனால் இராமலிங்கனாரோ கல்வியில் அவ்வளவாக ஈடுபாடு

காட்டவில்லை , ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் .

அதனால் இவரை நல்வழிப்படுத்த காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி

முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார் , ஆனால் அங்கும்

கல்வியில் ஈடுபாடு காட்டவில்லை , ஒருநாள் கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு

சென்ற இராமலிங்கனார் மனமுருகி கந்தனை வேண்டி பாடல் ஒன்றை பாடியுள்ளார் .

இதனை கேட்ட பொதுமக்களும் , அவரது ஆசிரியருமான சபாபதி அவர்களும் மெய்

மறந்து போயினர் . இராமலிங்கனார் தெய்வப்பிறவி என்பதை அனைவரும் உணர்ந்தனர்

. அன்றிலிருந்து தமது ஆன்மிக பாதையில் பயணிக்கத் தொடங்கினார் வள்ளல்

பெருமகனார் . வள்ளல் பெருமகனார் , முருகதாச சுவாமிகள் , பாம்பன்

சுவாமிகள் ஆகிய மூவரும் கந்த கோட்டத்தை வழிபட்டு பாமாலைகள்

பாடியருளியுள்ளனர் .

வள்ளலார் தமது பனிரெண்டாம் அகவை முதல் ஞான வாழ்க்கையை தொடங்கினார்கள் .

சிறு வயது முதலே பல நற்குணங்களை பெற்று திகழ்ந்தார் . 1850 ல் இவருடைய

இருபத்தேழாம் அகவையிலே திருமணம் நடைபெற்றதாக வரலாற்று குறிப்புகள்

தெரிவிக்கின்றன. சிறுவயது திருமணம் நடைமுறையில் இருந்த அக்காலகட்டத்தில்

சரியான வயதில் திருமணம் புரிந்து தனது திருமணத்திலேயே புரட்சி

செய்துள்ளார் .


வள்ளலார் பன்முக ஆற்றல்களை பெற்றுத் திகழ்ந்தார் . அவர் சிறந்த

சொற்பொழிவாளர் , உரையாசிரியர் , இதழாசிரியர் , பதிப்பாளர் , இறையன்பர் ,

சித்த மருத்துவர் , நூலாசிரியர் , தமிழ் மொழி ஆய்வாளர் , பசிப்பிணி

போக்கிய அருளாளர் , சமூக சீர்த்திருத்தவாதி என பன்முக ஆற்றல்களை பெற்று

தொண்டாற்றினார் என்றால் மிகையல்ல .

எல்லாவற்றையும் விட மூட பழக்க வழக்கங்கள் மலிந்து கிடந்த

அக்காலகட்டத்தில் தலைசிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக திகழ்ந்தார் .

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர்

தோற்றுவித்த மார்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்கம் என பெயரிட்டார்.

மொழிச் சங்கம் நமக்கு அறிந்ததே. ஆனால் ஆன்மிக சங்கம் நமக்கு புதுமையானது

. தமிழகத்தில் முதன்முதலில் ஆன்மிக சங்கம் தோற்றுவித்தது வள்ளலார்

பெருமகனார் ஆவார் .

வள்ளலாருக்கு முன்பிருந்த ஞானிகள் ,சமய குரவர்கள் , நாயன்மார்கள் ,

ஆழ்வார்கள் , சித்தர்கள் ஆகியோர் பலர் மடங்களை அமைத்தே தொண்டாற்றினர் ,

வள்ளல் பெருமகனாரோ சங்கம் அமைத்து சமூகத் தொண்டாற்றினார் . ஏனெனில்

சங்கம் அனைவருக்கும் பொதுவானது. எல்லோரையும் அரவணைத்து கொள்ளவல்லது .

வள்ளலார் தம் வாழ்நாளில் பெரும் அதிசயங்களையும் , அற்புதங்களையும்

நிகழ்த்தி உள்ளார் . ஒருமுறை இராமசாமி என்பவரது நாவில் ஏற்பட்ட புற்று

நோயை குணப்படுத்தி அதிசயம் நிகழ்த்தினார் . பக்தர்களின் நோயினை

குணப்படுத்தி அதிசயம் நிகழ்த்துவார். அப்பாசாமி என்பவரது

வாழைத்தோட்டத்தில் வள்ளல் பெருமகனாரை பாம்பு ஒன்று தீணடியது , ஆனால்

அப்பாம்பின் விடம் அடிகளாரை ஏதும் செய்யவில்லை , தீண்டிய பாம்போ மாண்டு

போனது . கருங்குழியில் அன்பர் ஒருவரது வீட்டில் அடிகளார் தங்கி இருந்த

போது அப்போது எண்ணெய் என கருதி அவர் விளக்கினில் தண்ணீரை இட்டபோதும்

விளக்கு எரிந்த அதிசயம் நிகழ்ந்தது .

சாதிய பாகுபாடுகளை சாடினார் . இதனால் பழமைவாதிகளின் எதிர்ப்பினைப்

பெற்றார் ஆயினும் இவர்தம் அறவழியே பயணித்தார் . தொடர்ந்து மக்கள்

தொண்டாற்றினார். சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கெல்லாம் முன்னோடியாக

திகழ்ந்தார் . அறிவுநெறி தழைத்தோங்க வடலூரில் சத்திய ஞான சபையை

நிறுவினார் . இவரது கோட்பாடுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு

பின்பற்ற வேண்டிய முற்போக்கு வாழ்வியல் முறையாகும் .

இறைவன் ஒன்றே என்றார் , அவர் அருட்பெருஞ்சோதி என்றார். அவ்விறைவன்

அனைவருக்கும் பொது என்றார் . தமிழகத்தின் முன்னோடி சாதி சமய மறுப்பாளர்

வள்ளல் பெருமகனார் ஆவார் . 1867 ம் ஆண்டில் அல்லலுறும் மக்களின்

பசிப்பிணி போக்க சத்திய தரும சாலையை நிறுவினார். அன்றிலிருந்து இன்று வரை

அரசின் உதவியோடும் , நன்கொடையாளர்களின் பங்களிப்போடும் அணையா அடுப்பு

தொடர்ந்து பசியாற்றி வருகிறது .

” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வடினேன் “ என்பதன் மூலம் பிற உயிர்களை தன்

உயிர் போல பாவித்து காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார் .

புலால் உண்ணுதலையும் , பலி இடுவதையும் சாடியுள்ளார் . ஆனால் பசிப்பிணி

போக்குவதே அறமாக வலியுறுத்தியுள்ளார் .

இவர்தம் தமிழுக்காற்றிய தொண்டும் போற்றுதலுக்குரியது . சின்மய தீபிகை ,

ஒழிவிலொடுக்கம் , தொண்டை மண்டல சதகம் முதலிய நூல்களை பதிப்பித்துள்ளார் .

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என அழைக்கப்படுகிறது

. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப் பட்டுள்ளது . ஜீவகாருண்ய ஒழுக்கம்

முதலான உரைநடைகளையும் இயற்றியுள்ளார் .


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த முற்போக்குவாதியாகவும் , சமூக

சீர்த்திருத்தவாதியாகவும் , ஆன்மிகவாதியாகவும் இடதுசாரி சிந்தனைவாதிகளின்

முன்னோடியாக திகழ்ந்த தமிழர் வள்ளல் பெருமகனார்.

அவரது கோட்பாடுகள் எக்காலத்தும் , எல்லா சமூகத்திற்கும் பொருந்தக்கூடியவை

. சமரச சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுவதன் வாயிலாக சமத்துவ சமுதாயத்தை

கட்டமைக்க இயலும் . நம் தமிழ் மண்ணில் பிறந்து முற்போக்கு சிந்தனைகளை

விதைத்து விட்ட வள்ளலாரின் அறவழியை நாமும் பின்பற்றுவோமாக , எல்லா

உயிர்களையும் தன் உயிர் போல கருதி கருணை கொள்வோமாக . வள்ளலார் பசிப்பிணி

ஆற்றும் உயரிய நோக்கத்தை நாமும் வாழ்வில் கடைபிடிப்போம் .

அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருள் பெறுவோம் .

அருட்பெருஞ்சோதி , தனிப்பெருங்கருணை ..

ஆக்கம் 

R.R 


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28