MENU

Show more

வருமா லோக்பால் சட்டம் ?

லோக்பால் சட்ட தாமதத்துக்கு என்ன காரணம்?

லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான தேர்வு கமிட்டியை அமைப்பதில் மோடி அரசு தாமதம் செய்து வருகிறது.


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை...
எதிர்கட்சித் தலைவர் இல்லை

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே உள்ளிட்டவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013-ல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். அதன்படி இப்போது லோக்பால் அமைப்பை உருவாக்கவேண்டும். லோக்பால் அமைப்பில் இடம்பெறுபவர்களைத் தேர்வு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட வேண்டும். தேர்வு கமிட்டியில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு சட்ட நிபுணர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற வேண்டும்.
லோக்சபா எம்.பி-க்கள் 545 பேரில் பத்து சதவிகித  எண்ணிக்கையைக் கொண்ட கட்சிதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க முடியும். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 45 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத சூழல் உள்ளது. இதனால்தான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்குப் பதில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராகக் கருதலாம் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கடந்த மார்ச் மாதமே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இது குறித்து தெரிவித்தது. ஆனால், இன்னும் கொண்டு வரப்படவில்லை.
இதனால்தான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் தாமதிக்காமல் லோக்பால் அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்று நீதிபதிகள் கூறி இருக்கின்றனர்.

அரசுக்கு அக்கறை இல்லை

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். "நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழிப்பில் மத்திய அரசு எவ்வளவு அக்கறையுடன் செயல்படுகிறது என்பதைத்தான் நீதிமன்றத்தின் கண்டனம் காட்டுகிறது. லோக்பால் மசோதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதமே குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி விட்டார். அதன் பின்னர் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று சொன்னார்கள்.
லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்று மோடி அரசு சொல்கிறது. ஆனால் லோக்பால் சட்டத்தில் பிரிவு 4(2)-ல்  தேர்வு கமிட்டியில் காலியிடம் இருந்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் லோக்பால் அமைப்பை உருவாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அவசரச் சட்டம் போடலாம்

அதே போல 1984-89-ல் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது அதிக எம்.பி-க்களை கையில் வைத்திருந்த தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்தனர். எனவே, மத்திய அரசு நினைத்தால்  லோக்பால் அமைப்பை உருவாக்கி விடலாம். அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. தவிர 2016-ல் லோக்பால் மசோதாவில் ஒரு  சட்டத்திருத்தம் கொண்டு வந்தனர். அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி வெளியிட வேண்டியதில்லை என்று சட்டத்திருத்தம் செய்தனர்.
தங்களுக்குத் தேவையென்றால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்கிறார்கள். பல்வேறு விஷயங்களுக்கு மோடி அரசு அவசரச் சட்டம் கொண்டு வருகிறது. இதற்காகவும் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கலாமே? கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், உண்மையில் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள்  கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டு வரவில்லை. உள்நாட்டிலும் அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை.
மத்திய அரசு இப்படி என்றால், தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதாவை இன்னும் தாக்கல் செய்யாமல் இருக்கிறது. அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அ.தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவோம் என்று கூறப்பட்டிருந்தது. மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்த பிறகு லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால், அதற்காக மாநில அரசு காத்திருக்க வேண்டியதில்லை. மாநில அரசு தன்னிச்சையாகக் கொண்டு வரலாம்" என்றார்.

அரசிடம் கோரிக்கை

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமனிடம் பேசினோம். "எதிர்க்கட்சித் தலைவர் இல்லை
என்பதால் லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்கின்றனர். லோக்சபாவில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியின் தலைவரை நியமிக்கலாம். இது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு வெறும் 5 நிமிடங்கள்தான் ஆகும். இதைக் கொண்டு வராமல் லோக் பால் அமைப்பை உருவாக்காமல் தாமதப்படுத்துகின்றனர்.
தமிழக அரசும் லோக் ஆயுக்தாவை கொண்டு வருவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது. லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ள  வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கோம்"என்றார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026