MENU

Show more

விசாரணை - சினிமா விமர்சனம்

விசாரணை - சினிமா விமர்சனம்

திகார வர்க்கத்தின் அடியாளாக இயங்கும் காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பு!

முகமற்ற, முகவரியற்ற எளிய மனிதர்களுக்காக துளி வீரியம் குறையாமல், இம்மி சமரசம் இல்லாமல் இப்படி ஒரு படம் தந்ததற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சல்யூட்..
முகவரியற்ற `கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம்’ குடிமகனோ, அரசியல் லாபிகளில் மல்ட்டிமில்லியன் புரட்டும் கோடீஸ்வரனோ... அதிகாரம் கழுத்தை இறுக்கினால் துரும்பும் தப்பாது என்பதை, முதுகுத்தண்டு சில்லிட விவரிக்கிறது ‘விசாரணை’யின் ஒவ்வொரு நிமிடமும்!

தினேஷ், ஆந்திராவில் ஒரு மளிகைக்கடையில் வேலைபார்க்கிறார். முருகதாஸ் உள்ளிட்ட தினேஷின் மற்ற மூன்று நண்பர்கள் அங்கேயே வேறு சிறு வேலைகள் செய்கின்றனர்.
நால்வருக்குமே இரவுகளை பூங்காவில் உறங்கிக் கழித்து, காசை மிச்சம்பிடிக்கும் வயிற்றுப்பிழைப்பு. அப்படியான ஒரு பூங்கா இரவு விடிகிறது... மிக மோசமாக! எந்தக் காரணமும் சொல்லாமல் தினேஷ் மற்றும் நண்பர்களை திடீரென அதிகாலையில் அழைத்துச்செல்லும் ஆந்திர போலீஸ், அடி வெளுத்து எடுக்கிறது. உயிரை மட்டும் மிச்சம் வைத்து உடலின் ஒவ்வோர் அணுவிலும் வலி பாய்ச்சுகிறது போலீஸின் ட்ரீட்மென்ட். உயிர்த் துளி வரை ஊடுருவி நடுங்கவைக்கும் சித்ரவதை. இத்தனையும் எதற்கு என்றே புரியாமல் அடிபட்டு முடங்கிக்கிடக்கிறார்கள் இளைஞர்கள். `விசாரணை'களுக்கு இடையில் அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். `ஒப்புக்கிறீங்களா?'.

`எதை ஒப்புக்கொள்ள வேண்டும், தாங்கள் செய்த குற்றம் என்ன?' என்று தெரியாத அந்த இளைஞர்கள், மேலும் மேலும் உயிர் சிதைக்கப்படுகிறார்கள்; தங்கள் கைதுக்கான காரணம் தெரிந்து, அதிர்ந்து, சூழ்ந்திருக்கும் இக்கட்டு உணர்ந்து தவித்துத் தத்தளிக்கிறார்கள். அப்போது எதிர்பாராத திருப்பமாக தமிழக போலீஸான சமுத்திரக்கனி மூலம், ஆந்திர போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து தமிழகம் திரும்புகிறார்கள். வீட்டுக்குக் கிளம்பும் முன், சென்னையில் சமுத்திரக்கனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தை ஆயுதபூஜைக்காக சுத்தம்செய்து தரச் சொல்கிறது போலீஸ். அதற்காக அங்கு தங்கும் ஓர் இரவில் நடப்பவை நடுக்கமூட்டும் திருப்பங்கள். அந்த இரவு தினேஷுக்கும் நண்பர்களுக்கும் எப்படி விடிந்தது என்பது... வெடவெடக்கச்செய்யும் க்ளைமாக்ஸ்!
படம் தொடங்கும்போது தினேஷ் பிடித்துச் செல்லப்படும் இரவு, இறுதிக்காட்சியில் திரையில் கவியும் இரவு... இரண்டு இரவுகளுக்கு இடையில் சாமானியர்களின் வாழ்க்கை நூலிழை உத்தரவாதம்கூட இல்லாமல் அல்லாடும் அவலத்தை முகத்தில் அறைகிறது படம். சைல்டு ஸ்பெஷலிஸ்ட், ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் நிபுணர்களைப்போல `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்'களையும் கொண்டாடப்பட வேண்டிய நாயகர்களாகச் சித்திரிக்கும் சினிமாக் களுக்கு மத்தியில், என்கவுன்டர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிகார அரசியலின் ஒவ்வொரு கண்ணியையும், நுட்பமாக வெளிக்கொண்டு வந்த நேர்மை, படைப்பை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. காவல் துறையின் சித்ரவதையும் அடக்குமுறையும் எந்த எல்லை வரை செல்லும் என்பதற்கு இந்தப் படம் உண்மைக்கு மிக நெருக்கமான ரெஃபரென்ஸ்.
அதிகார வர்கத்தின் கோர முகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டுகிறது.சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளாகியும் அப்பாவி மக்கள் அதிகார வர்கத்திடம் அடிமை பட்டு கிடப்பது நம் நாட்டின் மிக பெரிய வேதனையே... உண்மையை உரக்க சொன்ன இத்திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு சிறந்த படைப்பே...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026