MENU

Show more

குட்டி கதைகள் 5

கெடுவான் கேடு நினைப்பான்

மரியாதை ராமன்
வசித்து வந்த ஊரில்
சோமன் என்ற ஒரு
பணக்காரன் இருந்தார். அவர்
மிகவும் பொல்லாதவர்,
பணத்தாசைப் பிடித்தவர்.
தன்னிடம் வேலை
செய்பவர்களுக்கு சரியான
கூலி கொடுக்கமாட்டார்.
ஒருமுறை சோமன் தன்
தோட்டத்தில் விளைந்த
தேங்காய்களை சந்தையில்
விற்று விட்டு, கிடைத்த
பத்தாயிரம் ரூபாயுடன்
தன்னுடைய மாட்டு
வண்டியில் காட்டு
வழியாக வீட்டுக்கு வரும்
போது தனது
பணப்பையைத்
தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும்
வண்டியில் பணப் பையை
தேடி பார்த்து
கிடைக்காமல் புலம்பி
தள்ளினார். மாட்டு வண்டி
ஓட்டி வந்தவர் முதல்
அனைவரையும் கேட்டு
பார்த்து கிடைக்காமல்
என்ன செய்வது என்று
தெரியாமல் விழித்தார்.
அப்போ அவரது
மனைவியார் ‘உங்க
பணப்பையை
கண்டுபிடித்து
கொடுப்பவர்களுக்கு
தகுந்த சன்மானம்
கொடுக்கிறேன் என்று
சொல்லுங்க, கண்டிப்பாக
யாராவது கொண்டு
வந்து கொடுப்பாங்க’
என்றார்.
ஆகா இது நல்ல திட்டமாக
இருக்கிறதே என்று
நினைத்து அடுத்த நாளே
ஊர் முழுவதும்
தண்டோரா போட்டு
சொல்லிவிட்டார். ஊரு
மக்களும் பணப்பை
கிடைத்தால் கொடுத்து
சன்மானம் வாங்கலாம்
என்று நினைத்தார்கள்.
அப்படி தேடி பார்த்தும்
யாருக்கும் பணப்பை
கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து ஒரு
வாரத்திற்கு பின்பு
அருகில் இருந்த
ஊரிலிருந்து அந்த
ஊருக்கு ஒரு
வழிப்போக்கர் வந்தார். அவர்
பெயர் பூபாலன். மிகவும்
நல்ல குணமுடையவர்.
ஏழையாக இந்தாலும்
கவுரவமாக வாழ
பிரியப்படுபவர். தன்னால்
முடிந்தவரை
அடுத்தவர்களுக்கு
உதவுபவர்.
அவர் விவசாயம் செய்த
நிலத்தில் நிலத்தடி நீர்
கிடைக்காததால்
விவசாயம் சரியாக செய்ய
முடியவில்லை வேறு
தொழில் செய்யவோ
தன்னிடம் பணமும்
அனுபவமும் இல்லை
என்பதால் பக்கத்து ஊருக்கு
சென்று ஏதாவது
வேலை செய்து
சம்பாதித்து பின்னர்
தொழில் தொடங்க
நினைத்து வந்தார்.
போகிற வழியில் காட்டுப்
பாதையில் இருந்த அம்மன்
கோயிலுக்கு போய்
வேண்டிக் கொண்டார்.
அப்படி காட்டு வழியில்
போகும் போது அங்கே
ஒரு புறா அடிப்பட்டு
கீழே கடந்தது. அதை
பார்த்து இரக்கப்பட்ட
பூபாலன் அந்த புறாவை
தூக்கிக் கொண்டு
அருகில் இருந்த
குளத்திற்கு கொண்டு
சென்ற தண்ணீரை எடுத்து
அந்த புறாவின் வாயில்
ஊற்றினார், பின்னர் அந்த
புறாவை அருகில்
இருந்த மரக்கிளையில்
வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது
பாதையின் ஓரத்தில்
காலில் ஏதோ
மாட்டியதை கண்டார்,
அது ஒரு பை அதில்
நிறைய பணமும்
இருந்தது. அதை
எடுத்தவுடன்
பூபாலனுக்கு யாரோ
பாவம், தன் பணப்பையை
விட்டுவிட்டு
போயிட்டாங்க, அப்படி
தொலைத்தவர் மனம்
எத்தனை
வேதனைப்படுமோ,
எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து
கொடுத்துவிட
வேண்டும் என்று
ஊருக்கு விரைந்தார்.
அப்போது ஊருக்குள்
சென்ற போது அங்கு
இருந்த கடையில்
விசாரித்தபோது
கடைக்காரர் சோமனைப்
பற்றி சொல்லி அவர் தான்
தொலைத்தவர், நீங்க இதை
கொடுத்தால், கண்டிப்பாக
சன்மானம் கொடுப்பார்
என்றார்.
உடனே பூபாலனும்
சோமன் வீட்டை தேடி
பிடித்து சென்று
பணப்பை கிடைத்த
விபரத்தை சொன்னார்.
சோமனுக்கு சந்தோசம்
தாங்கமுடியவில்லை.
உடனே அந்தப் பணப்பையை
வாங்கிக் கொண்டார்,
அதேநேரம் அவரது கெட்ட
எண்ணமும் வெளிப்படத்
தொடங்கியது. பணப்பை
கிடைத்துவிட்டது,
பணமும்சரியாக
இருந்தது, இப்போ ஏன்
இவனுக்கு சன்மானம்
கொடுக்க வேண்டும்.
சன்மானம் கொடுக்காமல்
தப்பிக்க என்ன செய்யலாம்
என்று யோசித்தார்
சோமன்.
கெட்ட மனம் கொண்ட
சோமன் பூபாலனைப்
பார்த்து ‘நீ என்னை
ஏமாற்றப் பார்க்கிறாய்,
நான் என்னுடைய பையில்
வைர மோதிரம்
ஒன்றையும்
வைத்திருந்தேன், அது
காணவில்லை.
மரியாதையாக
கொடுத்து விடு,
உன்னை சும்மா
விடமாட்டேன்’ என்று
கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே
புரியவில்லை,
ஒருவேளை இவர்
சொன்னது போல் வைர
மோதிரம் இருந்து
தொலைந்து
போயிருக்குமா, நாம்
தான் எடுக்கவில்லையே
இவரிடம் சன்மானம்
வாங்குவதைவிட
பிரச்சினையில் இருந்து
தப்பிக்கலாம் என்று
யோசித்தார்.
சோமனோ விடாமல் கத்தி
ஆர்ப்பாட்டம் செய்தார்.
பூபாலன் பணப்பை
கொண்டு வந்த செய்தியை
ஊராருக்கு சொன்ன
கடைக்காரர், கஞ்சப்பயல்
சோமன் அப்படி என்னத்தான்
பரிசு கொடுக்கப்
போறான் என்று
பார்ப்போம் என்று
அனைவரையும்
அழைத்து வந்தார். வந்த
இடத்தில் பூபாலன்
குற்றவாளி போல
நிற்பதை கண்ட ஊரார்
சோமனை சும்மா
விடக்கூடாது, இந்த
பிரச்சினையை
மரியாதை ராமனிடம்
தான் கொண்டு சென்று
தீர்ப்பு கேட்க வேண்டும்
என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில்
சோமன், பூபாலன்,
ஊர்மக்கள் அனைவரும்
மரியாதை ராமன்
முன்னால் போய்
நின்றார்கள். சோமன் தான்
பணப்பையையும், அதில்
இருந்த வைர மோதிரம்
தொலைத்த கதையையும,
பூபாலன் தான் பணப்பை
கண்டுபிடித்த
கதையையும்
சொன்னார்கள்.
ஏற்கனவே சோமன்
அறிவித்த தண்டோரா
பற்றி மரியாதை
ராமனுக்கு தெரியும்.
அப்போ தண்டோரா
போடும் போது
வைரமோதிரம் பற்றி
ஒன்றும் சொல்லாததும்
தெரிந்தது தான்.
ஆக மொத்தம் சோமன்
ஏமாற்றுகிறான் என்பதை
புரிந்துகொண்ட
மரியாதை ராமன்,
சோமனுக்கு சரியான
தண்டனை கொடுக்க
நினைத்து இவ்வாறாக
தீர்ப்பு கூறினார் ‘சோமன்
தொலைத்த பையில்
பணமும், வைர
மோதிரமும் இருந்தது
என்று அவரே
சொல்லியிருக்கிறார்.
இப்போது பூபாலன்
கொண்டு வந்த பையில்
பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின்
பையே இல்லை, வேறு
யாரோ தொலைத்த பை.
அப்படி தொலைத்தவர்
இதுவரை யாரும் புகார்
கொடுக்கவில்லை,
அவ்வாறு யாரும் புகார்
கொடுக்காதவரை நம்ம
ஊரு வழக்குப்படி
கிடைத்த பணத்தில் 10
பங்கு
அம்மன்கோயிலுக்குக்
கொடுத்துவிட்டு,
மீதியை எடுத்தவரே
வைத்துக்கொள்ளலாம்.
ஆக பூபாலன் அந்த
பணத்தை தன் சொந்த
உபயோகத்துக்கு
வைத்துக்கொள்ளலாம்,
சோமனின் பணம் மற்றும்
வைர மோதிரம் கொண்ட
பையை
கண்டுபிடித்தவுடன்
சோமனே சன்மானம்
கொடுப்பார், சபை
கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு
சொன்னதும் சோமனுக்கு
இதயமே நின்று போனது
போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த
பணத்தில் 10 சதவீதம் அம்மன்
கோயிலுக்கு
கொடுத்துவிட்டு,
மீதியை தன் சொந்த
ஊருக்கு கொண்டு
சென்று தொழில் செய்து
நலமாக வாழ்ந்து வந்தார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28