MENU

Show more

வெள்ளி திரை விமர்சனம்- மாசு

வெள்ளி திரை விமர்சனம்- மாசு

கதாநாயகன்-கதாநாயகி: சூர்யா-நயன்தாரா.

டைரக்ஷன்: வெங்கட் பிரபு.

கதையின் கரு: பேய் உதவியுடன் வில்லன்களை பழிவாங்கும் இளைஞன்.

சிரிப்பு பேய்களை பார்த்து இருக்கிறோம். ‘சீரியஸ்’ ஆன பேய்களையும் பார்த்து இருக்கிறோம். நெகிழ்ந்து உருக வைக்கும் பேயை பார்த்து இருக்கிறீர்களா? சூர்யா-வெங்கட் பிரபு கூட்டணி முதல்முறையாக இந்த புது பேயை அறிமுகம் செய்து இருக்கிறது.

மாஸ் என்கிற மாசிலாமணி துணிச்சலான திருடன். நண்பன் ஜெட்டு துணையுடன் ஒயின்ஷாப்பில் பணத்தை கொள்ளை அடிக்கிறான். அடுத்து, கடற்படை அதிகாரி போல் நடித்து கப்பலில் கொள்ளை அடிக்கிறான். பணத்துடன் காரில் வரும்போது, விபத்தில் சிக்குகிறான். மரணத்தின் வாசலை தொட்டு மீண்ட அவன் கண்களுக்கு பேய்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. பேய்களின் உதவியுடன் பணம் சம்பாதிக்கிறான்.

இந்த சந்தர்ப்பத்தில், ஒரு பெரிய பங்களாவுக்குள் பேய் இருப்பதாகவும், அதை விரட்டினால் பணம் கொடுப்பதாகவும் போன் வருகிறது. மாஸ் அந்த பங்களாவுக்குள் நுழைய-அவனைப் போன்ற தோற்றத்துடன் மிரட்டலான ஒரு பேய் ஆஜராகிறது. இலங்கை தமிழ் பேசுகிறது. மாஸ்சிடம் மொத்தமாக பணம் சம்பாதிக்கும் ஆசை காட்டி, அவன் மூலம் ஹவாலா கும்பலை சேர்ந்த சரத்லோகித்ஸ்ஸ்வா, வினோத் ஆகிய இரண்டு வில்லன்களையும் போட்டுத்தள்ளுகிறது.

தன்னை பயன்படுத்தி பேய் கொலை செய்கிறது என்பதை உணர்ந்ததும், மாஸ் சுதாரித்துக்கொள்கிறான். தன்னை விட்டு விலகுமாறு பேயை திட்டி விரட்டியடிக்கிறான். அப்போதுதான் அந்த பேய் யார்? என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. அதைக்கேட்டு மாஸ் அதிர்கிறான். அழுகிறான். அவனுக்கும், அந்த பேய்க்குமான தொடர்பு என்ன? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

குறும்புத்தனமான கொள்ளைக்காரன் மாஸ், ஹவாலா ஆசாமிகளை தீர்த்துக் கட்டும் இலங்கை தமிழர் சக்தி (பேய்) என இரண்டு வேடங்களில், சூர்யா. நடிப்பிலும், ஒப்பனையிலும் வேறு வேறு நபர்கள் என்று நம்ப வைக்கிறார். ‘மாஸ்’ கதாபாத்திரத்தில், சுறு சுறு சூர்யா. இவர் நர்ஸ் நயன்தாராவை ‘சைட்’ அடிப்பதும், அவரிடம் வசதியானவர் போல் பந்தா காட்டுவதும், கலகல காட்சிகள். அழகான மனைவி பிரணிதா, அன்பான குழந்தைகள் சகிதம் வரும் இலங்கை தமிழர் சக்தி, வசீகரமானவர். இறுக்கமும், சோகமும் படர்ந்த அவருடைய ஆவி சம்பந்தப்பட்ட காட்சிகள், மனதை கலங்க அடிக்கின்றன.

இருவரும் சந்தித்துக் கொள்ளும் கடைசி காட்சியில், ‘‘இதை ஏன் எங்கிட்ட சொல்லலை?’’ என்று மாஸ் விம்மலுடன் கேட்க- ‘‘அண்ணன் தம்பி என்று யாரும் கிட்ட வராதீங்கன்னு நீதானே சொன்னே? பணம்ன்னு நான் சொன்ன பிறகுதான் எங்கிட்ட பேசவே ஆரம்பிச்சே...’’ என்று சக்தி சொல்வதும்-கண்களை குளமாக்குகின்றன.

நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? சில காட்சிகளில் அழகாகவும், சில காட்சிகளில் களைப்பாகவும் தெரிகிறார். பிரணிதா, மெருகேற்றப்பட்டது போல் பளிச். ‘‘எனக்கு யார் அதிகம் கொடுக்கிறார்? என்பது முக்கியமல்ல...யார் முதலில் கொடுக்கிறார்? என்பதுதான் முக்கியம்’’ என்ற வசன குறும்புடன் வரும் போலீஸ் அதிகாரி பார்த்திபன், ரசிக்க வைக்கிறார்.

கருணாஸ், ஸ்ரீமன், சண்முக சுந்தரம், ரித்திகா சீனிவாஸ் என்று படத்தில் நிறைய பேய்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், கனடா சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்தனை அழகு. யுவன் சங்கர்ராஜா இசையில், பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. பின்னணி இசை, கதையுடன் ஒன்றியிருக்கிறது.

பேய்களின் நடனமும், கிராபிக்ஸ் மிரட்டல்களும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், படத்தின் முதல் பாதி மந்தமாக நகர்கிறது. இரண்டாம் பாதி வேகமும், விறுவிறுப்புமாக டைரக்டர் வெங்கட் பிரபுவின் பெயரை காப்பாற்றுகிறது.

நன்றி - தினத்தந்தி

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026